
செய்தி : கோபி
சிலாங்கூரில் ஜாலான் பந்திங்–டெங்கில் மைல் 8 பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், போலிஸுடன் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
இரவு 8.10 மணியளவில், புக்கிட் அமானின் ஜேஎஸ்ஜே தீவிர குற்றப் பிரிவு அதிகாரிகள் பந்திங், டெங்கில் மற்றும் சிப்பாங் பகுதிகளில் கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான நஓடிய பெரோடுவா மைவி கார் ஒன்றை போலீஸ் குழு கவனித்தது. காரை நிறுத்த முயன்றபோது, அந்த வாகனத்தில் இருந்த சந்தேக நபர் திடீரென போலீஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், போலீஸ் குழுவும் திருப்பிச் சுட்டது. இதில் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவக் குழு பரிசோதித்தபோது உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் உள்ளூர் ஆடவர் என போலீசார் சந்தேகிப்பதாகவும், அவர் தொடர்பான அடையாள ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
