
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த தமிழர்களின் வரலாற்றைச் சாட்சியமாகக் கொண்ட கிள்ளான் துறைமுக டெப்போ வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயம், பாதுகாப்பின்றி விட்டுவிடப்பட்டுள்ளதாக மலேசியத் தமிழர் முன்னேற்ற இயக்கத் தலைவர் ஸ்ரீரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்றைய மலாயாவின் நுழைவாயிலாக விளங்கிய கிள்ளான் துறைமுகப் பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயம், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள முக்கியமான பாரம்பரிய வழிபாட்டு தலமாக இருந்து வந்ததாக ஸ்ரீரமேஷ் குறிப்பிட்டார்.
ஆலய நிர்வாகம் பலமுறை முறையாக அணுகியிருந்த போதிலும், அந்த ஆலய நிலம் பிகேஎன்எஸ் (PKNS) தொடர்புடைய தனியார் மேம்பாட்டு நிறுவனத்திற்கு மேம்பாட்டிற்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த வரலாற்றுச் சின்னமான வழிபாட்டு தலம் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த ஆலயத்தை பாதுகாக்க வாக்குறுதி அளித்தவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டனர். இது மலேசிய இந்து சமுதாயத்திற்கும் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைக்கும் இழைக்கப்படும் துரோகம்,” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகள் மாநில அமைச்சராக இருந்த கணபதி ராவ், தற்போது இந்த ஆலயம் அமைந்துள்ள கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்தும், இந்த ஆலய நிலத்தை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்ரீரமேஷ்குற்றம் சாட்டினார்.
அதேபோல், கணபதி ராவின் தம்பியான பாப்பா ராய்டு, தற்போது மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருப்பதை குறிப்பிட்ட அவர், இருவரும் இணைந்து இந்த ஆலயத்தை காப்பாற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி அவர்களின் சிறப்பு அதிகாரியிடம் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது சேரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த பிரச்சினை, பாரம்பரிய வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பு மற்றும் தமிழர் மரபு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
