
கெஅடிலான் கட்சியின் பூச்சோங் தொகுதியில் நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டம் குழப்பத்தில் முடிந்ததாகக் கூறப்படுவதையடுத்து, அடிமட்டத் தலைவர்கள் மறுகூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் கூச்சல் மற்றும் குழப்பங்களின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த சம்பவம், வரும் ஜூன் மாதம் மலாக்காவில் நடைபெறவுள்ள கெஅடிலான் தேசிய மாநாட்டிற்கான தொகுதி பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பூச்சோங் தொகுதியைச் சேர்ந்த உச்சமன்ற உறுப்பினர் பரிதி வானன் ராமசாமி,
கூட்டத்தின் முடிவுகளை ரத்து செய்யுமாறு கெஅடிலான் பொதுச் செயலாளர் பூசியா சாலே அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பூச்சோங் தொகுதி தலைவர் ஜைஹாஸ்ரி ஜாபர்,
“இது கட்சியின் ஜனநாயக செயல்பாட்டில் வழக்கமாக நடைபெறும் சிறிய இடையூறு மட்டுமே. கூட்டம் மொத்தத்தில் சுமூகமாகவே நடைபெற்றது,” என்று விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமையின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
