
ஜாலான் கெபூன் நெனாஸ் சந்திப்புப் பகுதி, ஜே.ஜே வட்டச்சந்திக்கு அருகில் ஏற்பட்டுள்ள அடைந்த வடிகால் மற்றும் மழைக்காலங்களில் நீர் ஓட்டம் சீராக இல்லாதது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் நீர் தேக்கம் மற்றும் திடீர் வெள்ளப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள குப்பை பிடிப்பு அமைப்பு (perangkap sampah) குப்பைகள் தேங்கி நீர் ஓட்டத்தை தடைசெய்வதாகக் கூறி, அதனை அகற்றுமாறு கிள்ளான் ராஜாங்க மாநகராட்சி (MBDK) அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

“மக்களின் பாதுகாப்பும் வசதியும் உறுதிசெய்யப்பட வேண்டும். அதற்காக வடிகால் அமைப்பு நல்ல நிலையில் பராமரிக்கப்படுவது மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
அதேவேளை, பொதுமக்கள் சாலையோரங்களிலும் வடிகால்களிலும் குப்பைகளை வீச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“நாம் வீசும் குப்பைகளே இறுதியில் வடிகால்களை அடைத்து வெள்ளப் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. எனவே, சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் வலியுறுத்தினார்.



