
“பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்)யின் இரும்புக் கோட்டையாகவே நீடிக்க வேண்டும்,” என்று பிரதமரும் பி.கே.ஆர் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஜொகூர் பாருவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் (PH) 2026 மாநாட்டின் போது, அன்வர் மற்றும் பாண்டான் பி.கே.ஆர் தலைமைத்துவத்திற்கிடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றதாக பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
“மாநாடு முடிந்து புறப்படும் முன், பிரதமரையும் பாண்டான் பி.கே.ஆர் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தேன். அந்தச் சந்திப்பில், பாண்டான் தலைவர்கள் கட்சிக்கு தங்களின் முழு விசுவாசத்தையும் உறுதியளித்தனர்,” என்று ஜாஃப்ருல் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், “ஒற்றுமையை உடைக்காதீர்கள். பாண்டான் தொகுதி தொடர்ந்து பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்,” என்று பிரதமர் அரசியல் ரீதியாக முக்கிய அறிவுறுத்தலை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



