
அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் நிலவும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினருடனும் ஒரு விரிவான கலந்துரையாடலை நடத்துமாறு மிம்கோய்ன் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது என்று மிம்கோய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக, தொழில் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள கடுமையான, தொடர்ச்சியான அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை, கொள்கை ரீதியான முட்டுக்கட்டையைச் சரிசெய்ய இந்த கலந்துரையாடல் மிகவும் அவசியம்.
உள்துறை அமைச்சின் மூலம் அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்ப நடைமுறையில் சீரமைப்பு, வரவிருக்கும் பல அடுக்கு வரி விதிப்பு முறைக்காக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் சமீபத்திய சட்ட முயற்சிகளை மிம்கோய்ன் ஏற்றுக் கொண்டாலும் தனியார் துறை செயல்பாட்டு ரீதியான ஒரு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
இவ்விவகாரத்தில் உறுதியான, நடைமுறைத் தீர்வுகள் எப்போது வரப்போகின்றன? என்பது தான் மலேசியா முழுவதும் உள்ள வணிகங்கள் கேள்வி கேட்கின்றன:
அந்நியத் தொழிலாளர் நெருக்கடி என்பது உணவகங்கள், உணவு – பானங்கள் துறைகளுக்கு மட்டும் உரிய ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்று மிம்கோய்ன் வலியுறுத்துகிறது.
இது கட்டுமானம், உற்பத்தி, சேவைகள், தோட்டம், விவசாயம், சில்லறை வணிகம் உள்ளிட்ட பரந்த அளவிலான முக்கியத் தொழில்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினையாகும்.
கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் செயல்படுவது, செயல்பாட்டுச் செலவுகளை அதிகரித்து, வணிக விரிவாக்கத்தைத் தடுத்து, பெருந்தொற்றுக்குப் பிந்தைய மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாகத் தடுக்கிறது. – Nambikkai.com.my



