
சமீபத்தில் நடைபெற்ற மலேசிய ஐக்கிய கட்சியின் தொடக்க விழாவில் ஆறு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது, அவர்களின் கட்சி விசுவாசம் குறித்து கேள்விகளை எழுப்புவதாக கெஅடிலான் மகளிர் பிரிவின் துணைச் செயலாளர் ரோஸி ரஸித் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு தலைவரின் அரசியல் திசையை மக்களும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் தெளிவாக மதிப்பிட முடியும். ஆகவே, இந்தச் செயலை ஒரு சாதாரண அழைப்பை ஏற்றுக்கொண்ட நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது,” என்று கூறினார்.
மேலும், இந்த நிகழ்வு நம்பிக்கை கூட்டணி (Pakatan Harapan) 2026 மாநாடு நடைபெற்ற அதே நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியமான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்றார்.
அதேவேளை, பல தலைவர்கள் தொடர்ந்து கட்சியுடன் இணைந்து கூட்டணியின் போராட்டத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஆறு உறுப்பினர்கள் வேறுபட்ட அரசியல் திசையைத் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இது இனி தனிப்பட்ட பார்வை அல்லது கருத்து வேறுபாடு பற்றிய விஷயம் அல்ல. மாறாக, இது அரசியல் நிலைப்பாடு மற்றும் கட்சி விசுவாசம் குறித்த முக்கியமான விவகாரம்,” என்று ரோஸி ரஸித் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தற்போது கெஅடிலான் மற்றும் நம்பிக்கை கூட்டணிக்குள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



