
கோத்தா ராஜா கெஅடிலான் கட்சி, 25 புதிய கிளைகளை அமைத்ததுடன், 3,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு அடிமட்ட அரசியல் வலிமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த வளர்ச்சி வெறும் எண்ணிக்கையல்ல; மக்களிடையே கெஅடிலான் மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது வெளிப்படுத்துவதாக கட்சி தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், “கோத்தா ராஜா கெஅடிலான் மக்களோடு களத்திலும், சமூகத்திலும் இணைந்து செயல்படுகிறது என்ற நம்பிக்கை தற்போது மேலும் வலுவடைந்துள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோத்தா ராஜா கிளைத் தலைவரும், கெஅடிலான் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறுகையில், “அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவது, மக்களுடன் தொடர்ந்து நேரடியாக இணைந்து செயல்படுவது என்பது எங்களது கடமை,” என்றார்.
“மக்கள் எங்களுடன் இருக்கும் வரை, எங்களது போராட்டமும் தொடரும். உறுப்பினர்கள் அதிகரிக்கும் போது, எங்களது இயக்கமும் மேலும் வலுவடைகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பந்தார் செந்தோசாவில் நடைபெற்ற குழு அரசியல் உரை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், இத்தகைய அடிமட்ட நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் நேர்மறையான அரசியல் சூழலையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் கூறினார்.
கோத்தா ராஜா கெஅடிலான், தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டு, அடிமட்ட வலையமைப்பை விரிவுபடுத்தும் பணியில் உறுதியாக செயல்படும் என்றும் உறுதியளித்துள்ளது.



