
கம்போங் ஜாவாவில் அமைந்துள்ள SJKT Ladang Baru 4 புதிய பள்ளி கட்டுமானப் பணிகள் குறித்து, பள்ளி நிர்வாக சபை (LPS), பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பள்ளிக்கான நிலம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும், கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படாதது மிகுந்த கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“தற்போது பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை, மோசமான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல சவால்கள் நிலவுகின்றன. இதற்கு உடனடி தீர்வு அவசியமாகியுள்ளது,” என்றார்.
இந்த விவகாரத்தை விரைவுபடுத்துவதற்காக கல்வி துணை அமைச்சர் யாப் துவான் வோங் அவர்களின் உதவியை கோரியுள்ளதாகவும் யூபி குணராஜ் தெரிவித்தார்.
மேலும், பள்ளி கட்டுமான முயற்சிகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில் ஒரு சிறப்பு செயல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அந்தக் குழுவின் மூலம் செயல்திட்டம் (Road Map) தயாரிக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நலனுக்காக பள்ளி கட்டுமானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.



