
கெஅடிலான் கட்சி நாடு முழுவதும் உள்ள அதன் 222 தொகுதிகளிலும் தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கங்களை முன்னெடுத்து அடிமட்ட பலத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான குணராஜ் தெரிவித்துள்ளார்.
கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதி 25 புதிய கிளைகளை நிறுவி, 3,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை இணைத்த வெற்றியைத் தொடர்ந்து பந்தார் செந்தோசாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இதனை கூறினார்.
“இந்த சாதனை, கெஅடிலானுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதையும், கட்சியின் அடித்தளம் மிகவும் வலுவாக இருப்பதையும் நிரூபிக்கிறது,” என்றார்.
“இன்றைய கெஅடிலானின் பலத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் புதிய உறுப்பினர்களை தொடர்ந்து இணைத்துக் கொண்டு, அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இறுதியில், ஒரு கட்சியின் உண்மையான பலம் அதன் உறுப்பினர்கள்தான்,” என்று குணராஜ் வலியுறுத்தினார்.
போராட்டத்தை விட்டு விலகிச் செல்லும் தனிநபர்களால் கட்சி பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
“அரசியல் பயணத்தில் பலர் வருவார்கள், பலர் செல்வார்கள். அது இயல்பானது. ஆனால் கொள்கை, தொலைநோக்கு மற்றும் போராட்ட அடிப்படையில் உருவான கட்சி தொடர்ந்து நிலைத்திருக்கும்,” என்றார்.
மேலும், இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை 222 தொகுதிகளும் முக்கிய செயல்திட்டமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“மக்கள் நம்மை தேடி வருவார்கள் என்று காத்திருக்காமல், நாம் மக்களிடம் செல்ல வேண்டும். அவர்களைச் சந்தித்து இந்தப் போராட்டத்தில் மேலும் பலரை இணைக்க வேண்டும்,” என்று குணராஜ் தெரிவித்தார்.



