
எஸ்பிஎம் தேர்வில் 11A பெற்ற மாணவர் ஒருவருக்கு மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட மாணவருக்கு சிலாங்கூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் கல்வியைத் தொடரும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், பெட்ரோனாஸ் கல்வி உதவித்தொகையும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
“11A பெற்ற மாணவருக்கு அரசு கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறும் டிக்டாக் காணொளி ஒன்று அண்மையில் வைரலானது. இந்த விவகாரத்தை சரிபார்த்தபோது, அந்த மாணவருக்கு உண்மையில் சிலாங்கூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.
மேலும், அந்த மாணவர் பெட்ரோனாஸ் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கனியமுதன் என்பவர் வெளியிட்ட காணொளியில், தனது மகள் தென்மலர் எஸ்பிஎம் தேர்வில் 11A பெற்றிருந்த போதிலும் மெட்ரிகுலேஷன் இடம் கிடைக்கவில்லை என்றும், பாலிடெக்னிக்கில் சேரும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
அதே காணொளியில், விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களால் விண்ணப்பம் தாமதமானதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
டாக்டர் குணராஜ், தவறான தகவல்களைப் பரப்புவதற்கு முன் உண்மை நிலையை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.



