
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் திருப்பணிக்கான நிதி திரட்டும் நோக்கில், அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட தங்க காசு மற்றும் தங்க அம்மன் சிலை விற்பனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இளம் தொழில்முனைவர் சிஆர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம், தற்போது பல லட்சம் ரிங்கிட் செலவில் பிரமாண்டமாக மறுகட்டமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆலயப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய ஆலய நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த திருப்பணிக்கு ஆதரவாக, 0.2 கிராம் எடையுடைய அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட தங்க காசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 501 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 70 கிராம் சுத்தத் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சிலையின் மதிப்பு 60,000 ரிங்கிட் ஆகும். ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜையில் வைக்கப்படும் இந்த சிலை, அதிகபட்ச தொகை வழங்கும் பக்தரிடம் முறையாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தங்க காசு மற்றும் தங்க அம்மன் சிலை விற்பனைக்கான அதிகாரப்பூர்வ அனுமதி ஆலய நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து நிதியும் நேரடியாக ஆலய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் சிஆர் கார்த்திக் உறுதியளித்தார். இதேவேளை, ஆலயத்தின் கருவறைகள் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கப்படுவதாக கவிமாறன் தெரிவித்தார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சிஆர் கார்த்திக், கவிமாறன், ஆலயத் தலைவர் சுரேந்திரன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.



