
மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த QR பணப் பரிவர்த்தனை அமைப்பை உருவாக்கும் நோக்கில், தற்போதுள்ள தனியுரிமை QR கட்டண வலையமைப்புகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த நிதிப் பரிமாற்றக் கட்டமைப்புக் கொள்கை அறிக்கையின்படி, தற்போதுள்ள அனைத்து தனியுரிமை QR வலையமைப்புகளும் 2028 ஆம் ஆண்டு ஜூன் 30-க்குள் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.
அதேவேளையில், இந்த மாற்றக் காலத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது QR வலையமைப்புகளில் புதிய வர்த்தகர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அணுகுமுறையின் மூலம், மக்கள் எந்த வங்கி அல்லது மின்-பணப்பை (e-Wallet) செயலியையும் பயன்படுத்தி ஒரே ஒருங்கிணைந்த QR வலையமைப்பின் வாயிலாக பணம் செலுத்த முடியும். இதன் மூலம் QR கட்டண முறைகள் எளிமையாகவும் வசதியாகவும் மாறும் என பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது.
தற்போது DuitNow Transfer மற்றும் DuitNow QR சேவைகளை வழங்கி வரும் PayNet நிறுவனத்தில் பேங்க் நெகாரா 35.5 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது. இதனுடன், நாட்டின் மிகப்பெரிய வங்கியான Maybank உள்ளிட்ட மொத்தம் 11 நிதி நிறுவனங்களும் PayNet-இல் பங்குதாரர்களாக உள்ளன.



