
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு பாஸ் வழங்கிய ஆதரவு வரவேற்கத்தக்கது என்றாலும், அது எதிர்காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான எந்தவொரு அரசியல் ஒத்துழைப்புக்கும் உத்தரவாதமாக கருதப்படக் கூடாது என்று தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தேசியக் கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில், குறிப்பாக மஇகா மற்றும் மசீச வேட்பாளர்களுக்கு பாஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பதை அவர் பாராட்டினார்.
“அது பாஸ் தலைமையின் முடிவு. அந்த ஆதரவை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம். ஆனால், அதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால அரசியல் ஒத்துழைப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
மேலும், பாஸ் வழங்கிய ஆதரவு அம்னோவின் தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். அந்த ஆதரவு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் உண்மையாகவே பிரதிபலிக்கும் என நம்புகிறோம்,” என்று ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
சீன சமூகத்தினருடன் நடைபெற்ற நட்புறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.



