
ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிய நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சத்து தலைவர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின், தனது பாகோ நாடாளுமன்றத் தொகுதியையும் இழக்கக்கூடும் என்று முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கருத்து தெரிவித்துள்ளார்.
“கெலுவார் செகேஜாப்” (Keluar Sekejap) என்ற பாட்காஸ்டில் பேசிய அவர், ஜொகூர் மாநிலம் நீண்ட காலமாக பெர்சத்து கட்சியின் முக்கிய கோட்டையாகக் கருதப்பட்டதாக கூறினார்.
“முகைதீன் யாசின் நீண்ட காலமாக அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜொகூர் மாநில மந்திரி பெசாராகவும் பணியாற்றியுள்ளார். இருப்பினும், ஜொகூர் தேர்தல் முடிவுகள் பெர்சத்துக்கு சாதகமாக அமையவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
முகைதீன் யாசின் இதுவரை ஒன்பது முறை பாகோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 1978 முதல் 1986 வரையும், பின்னர் 1995 முதல் தற்போது வரை அந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.
2022 பொதுத் தேர்தலில், அவர் 10,007 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாகோ தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
மேலும், முகைதீன் 1986 முதல் 1995 வரை ஜொகூர் மாநில மந்திரி பெசாராகவும் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



