
அரசவை மற்றும் அரச குடும்பத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் ஒருவர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இஸ்லா வஹ்யூடி ஜைனுடின், நீதிபதி அகமத் ஃபுவாத் ஒத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றச்சாட்டின்படி, கடந்த ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில், “randuk malaysia” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அரசவை மற்றும் அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை அவர் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சர்ச்சைக்குரிய பதிவு பின்னர் ஜனவரி 24ஆம் தேதி, சைபர்ஜெயாவில் உள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) தலைமையகத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் மீது 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(a) கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதே சட்டத்தின் பிரிவு 233(2) கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.



