
கடந்த 15 மாதங்களாக வருமான பாதிப்பு, வேலை இழப்பு போன்ற காரணங்களால் ஏழைக் குடும்பங்களின் நடைமுறை வாழ்க்கை நிலைகுத்தி நிற்கிறது; அதனால் குடும்பத் தலைவிகள் செய்வதறியாது கண்ணீர் வடிக்கின்றனர்.
அண்மையில் மீட்சி உதவித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும் வாடகைவீட்டில் குடியிருப்போர் வாடகை செலுத்த முடியாமல் அல்லல் படுவது ஒருபுறம் என்றால், பள்ளிகளுக்கும் உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல முடியாமல் பிள்ளைகள் வீட்டிலேயே இருப்பதால் சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட சமையல் பொருட்களின் விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் திக்குமுக்காடுவது மறுபுறம் என ஏராளமான குடும்பங்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது;
குறிப்பாக குடும்பத் தலைவிகளின் நிலைதான் கண்ணீர் வடிக்கும்படியாக இருக்கிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் மணிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார சிக்கலாலும் எதிர்காலம் குறித்த நிச்சயமமற்ற தன்மையாலும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவோர் தற்கொலைக்கு முற்படும் நிலையும் அதிகரிக்கிறது.
அண்மையில் எஸ்பிஎம் தேர்வு வந்ததைத் தொடர்ந்து எஸ்டிபிஎம் தேர்வு முடிவும் விரைவில் வெளிவர இருக்கும் சூழ்நிலையில் உயர்க்கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய பிள்ளைகள் உள்ள குடும்பங்களின் தாய்மாரின் நிலை கையறு நிலையில் இருப்பதால், சமூக நலத் திட்டத்தை அரசு இன்னும் விரிவாக்க வேண்டும்.
தவிர, மன உளைச்சலுக்கு ஆளாவோர் அந்த நிலையில் இருந்து விடுபடவதுடன் ஆறுதலும் உரிய வழிகாட்டலும் பெறுவதற்கு ‘பி ப்ரண்டர்ஸ்’(03-7627 2929) & sam@befrienders.org.my), ‘தாலியான் காசே’ (15999 & 019-2615999புலனம்), ஸ்நேகம்(1800-88-1000 – திங்கள் முதல் வெள்ளி வரை 24 மணி நேரம்), மலேசிய மன நல மருத்துவ சங்கம்(03-2780 6803) போன்ற அமைப்புகளை நாட வேண்டும் என்றும் மணிமாறன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
