
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாநிலம் முழுவதும் 1,254 தடுப்பூசி மையங்கள் திறக்கப் பட்டிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய 1,254 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் திறக்கப் பட்டுள்ளது.
இதில் 5 பெரிய அளவிலான மெகா தடுப்பூசி மையங்கள், சமூக மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 தடுப்பூசி மையங்கள், 15 செல்கேர் கிளினிக்குகள், 1,228 கிளினிக்குள் ஆகியவையும் அடங்கும் .
செல்வேக்ஸ் ஏற்பாடு செய்துள்ள மெகா தடுப்பூசி செலுத்தும் மையங்கள், சமூக மண்டபங்கள், செல்கேர் கிளினிக்குகள் மற்றும் கிளினிக்குகளில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத சுமார் ஐயாயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக தினசரி 43,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த தாங்கள் இலக்கு கொண்டிருக்கிறோம்.
தடுப்பூசி விநியோக சிறப்பு பணிக் குழுவிடமிருந்து மேலும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலத்திற்கு கிடைத்தவுடன் ஜூலை மாதத்தில் தினசரி 135,000 பேருக்கும் ஆகஸ்டு மாதம் 165,000 பேருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என்று அவர் கூறினார்
