
நோய் தொற்றால் வருமானத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வெள்ளைக்கொடி இயக்கம் தற்போது உதவிக்கரம் நீட்டி உள்ளது.
யாரும் கடினமான முடிவுக்கு வராதீர்கள். உணவு இல்லை என்றால் வீட்டின் முன் வெள்ளை கொடியை பறக்க விடுங்கள் என்று மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்துக்கு நாடு தழுவிய அளவில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
அந்த வகையில் கஷ்டப்படும் பகாங் குவாந்தானை சேர்ந்த மக்களும் தங்கள் வீட்டின் முன் வெள்ளைக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
இந்த வெள்ளைக் கொடிகளை இறக்கும்படி போலீசார் குவாந்தான் மக்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக teruntum தொகுதி கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர் சிம் சூன் சியான் தெரிவித்தார்.
வெள்ளைக் கொடியை இறக்கா விட்டால் 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருப்பதாக அவர் கூறினார்.
கிராம தலைவரும் போலீசாரை அழைத்து வந்து கொடிகளை இழக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும் கொடிகளை ஏற்றி வைத்த குடும்பங்களுக்கு அரசு சார்பற்ற இயக்கங்கள் உதவிகளை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
வருமானத்தை இழந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் படி அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் நேற்று கிளாந்தான் பாசிர்மாஸ் என்ற இடத்தில் வருமானம் இழந்த குடும்பம் வீட்டின் முன் இரவு நேரத்தில் வெள்ளை கொடியை பறக்க விட்டது. இன்று காலையிலேயே அந்த குடும்பத்திற்கு தேவையான உணவு கூடைகள் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது



