
நாட்டில் உள்ள உலோகப் பொருட்கள் மறுசுழற்சி தொழில் செய்யும் கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதி ராவ் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக மறுசுழற்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு பக்கம் இது வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறுபக்கம் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
அட்டைப் பெட்டிகள் மற்றும் பால் டின் குவாளைகளை சேகரித்து அதன்மூலம் வருமானத்தை தேடிவந்த பலர் இன்று வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 50 முதல் 100 வெள்ளி வரை சம்பாதித்த இவர்கள் இப்போது எந்த ஒரு வருமானம் இல்லாமல் இருப்பது வேதனையாகும் என்றார் அவர்.
உலகப் பொருள் மறுசுழற்சி கடைகள் அனைத்தும் மூடப் பட்டிருப்பதால் இந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
நாளொன்றுக்கு லட்சக்கணக்கான டன் குப்பைகளை சேகரித்து அதை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு இவர்கள் முக்கிய பங்காற்றி வந்தனர்.
ஆகவே Sop விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிலுள்ள மறுசுழற்சி கடைகள் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



