
கடந்த 1978இல், ஜொகூர், ஸ்கூடாய், ரினி தோட்டத்தில், 6.5 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள், தற்போது அந்நிலம் தங்களுக்குச் சொந்தமானதாக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நாட்டில் புகழ்பெற்ற மலேசியக் கினி இணையத்தளம் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
ரினி தோட்ட நில விவகாரம் தொடர்பில்
2021, ஜூலை 2ஆம் தேதி, தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம் (கே.பி.ஜே.) மற்றும் அதன் தலைமைச் செயலாளர் எஸ் கோபாலகிருஷ்ணன் மீது, நூசா பெஸ்தாரி காவல் நிலையத்தில் நிலத்தை வாங்கிய முன்னாள் ரினி தோட்டத் தொழிலாளர்கள் போலிஸ் புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.
1978இல், அத்தோட்டத்தின் உரிமையாளர் (ஒரு வெள்ளைக்காரர்), அங்கு வேலை செய்த தங்களுக்கு, 6.5 ஏக்கர் நிலத்தை வீடுகள் கட்டிக்கொள்ள வழங்கியதாகவும், அப்போது தோட்டத்தில் மண்டோராகவும் ம.இ.கா. கேலாங் பாத்தா கிளைத் தலைவராகவும் இருந்த முனுசாமியிடம் அதற்காக தாங்கள் பணத்தைச் செலுத்தியதாகவும் பணம் போட்ட 46 பேரைப் பிரதிநிதித்து போலிஸ் புகார் அளித்த பெரியவர் இராமன் அர்ஜுணன் ( வயது 70) தெரிவித்தார்.
ரினி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சொந்தமான அந்நிலத்தில், தற்போது கேபிஜே இரண்டு மாடி, இரட்டை வீடுகளைக் கட்டி, விற்பனை செய்து வருவதாக, பணம் செலுத்திய முன்னாள் தோட்டத் தொழிலாளி, மருதாயி (தற்போது உயிருடன் இல்லை) அவர்களின் மகன், எம் சுப்பிரமணியம், (வயது 66) தெரிவித்தார்.
அந்தக் காலகட்டதில், கே.பி.ஜே. தலைவராக இருந்த துன் எஸ் சாமிவேலு, 15 ஆயிரம் வெள்ளிக்கு நிலத்தோடு வீடு கட்டிதருவதாக எங்களுக்கு உறுதி அளித்தார்.
ஆனால், தற்போது அந்நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளிக்கு விற்கப்படுகின்றன.
தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகமான கே.பி.ஜே., தொழிலாளர்களுக்காக அல்லாமல், பணக்கார வர்க்கத்திற்கு வீடுகளைக் கட்டி விற்று கொண்டிருக்கிறது.
“பி40 வர்க்கத்தைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்களால், 4 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளிக்கு வீடுகளை வாங்க முடியுமா?” என்றும் சுகு என்று நன்கு அறிமுகமான சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.
- நன்றி மலேசிய கினி



