
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்
செல்வேக்ஸ்“ எனப்படும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மாநில மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நேற்று வரை செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 51,374 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பண்டமாரான் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய இரண்டாம் கட்ட பதில் நடவடிக்கை ஜூலை 19ஆம் தேதி தொடங்குவதாக
பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தெரிவித்தார்.
பண்டமாரான் தொகுதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிக்கான கோட்டா இன்னும் முழுமையடையாததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
பண்டமாரான் தொகுதிக்கு 2,500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 முதல் 9 ஆம் தேதி வரை 750 பேர் மட்டுமே தடுப்பூசி பெறுவதற்கு பதிந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசி திட்டத்தில் “கிஸ்“ எனப்படும் சிலாங்கூர் விவேக அன்னையர் பரிவுத் திட்ட அட்டையைக் கொண்டிருப்போர், மீன், காய்கறி போன்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர், மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள், கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வழிபாட்டுத் தலங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பொது போக்குவரத்து வாகன ஓட்டுனர்கள், அத்தியாவசிய பொருள் விநியோகத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஜூலை 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை இந்த தடுப்பூசி பதிவு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.



