
சிலாங்கூர் மாநிலத்தில் 6 மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் உத்தரவு நாளை முதல் பிறப்பிக்கப்படுகிறது. வரும் மே 17ஆம் தேதி வரையில் அமுலில் இருக்கும் இந்த உத்தரவால் இந்திய உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் வேதனையோடு தெரிவித்தார். ஏற்கனவே இரண்டு MCO உத்தரவால் இந்திய உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

மொத்தம் 14 மாதங்கள் இந்த நடமாட்ட உத்தரவால் உணவக உரிமையாளர்கள் வியாபாரத்தை நடத்த முடியாமல் பெரும் அவதியை எதிர்நோக்கினர்.
இதிலிருந்து நாங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டும் வருகிறோம்.
அதற்குள் சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு மாவட்டத்தில் பிறப்பிக்கப்படும் நடமாட்ட உத்தரவால் பல இந்திய உணவகங்கள் பெரும் இழப்பை எதிர்நோக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் ஒரு மேஜையில் இருவர் அமர்ந்து சாப்பிட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
எஸ் ஓ பி விதிமுறைகளை பின்பற்றி உணவங்களைத் தொடர்ந்து நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகவே அரசாங்கம் ஒரு மேஜையில் இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கினால் இந்திய உணவக உரிமையாளர்கள் பாதிப்பிலிருந்து மீள்வார்கள் என்று சுரேஷ் தெரிவித்தார்.
