
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள மக்கள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே குறைந்தது ஒரு தடுப்பூசியை
பெற்றிருப்பர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுன் தலைமையில் நடைபெற்ற கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கான தடுப்பூசித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
தடுப்பூசி பெறுவதற்கான தேதி இன்னும் கிடைக்காத கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் பேருக்கு இம்மாதம் 26ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி வழங்கப்படுவதும் அத்திட்டத்தில் அடங்கும்.
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை தேசிய தடுப்பூசித் திட்டத்துடன் இணைக்கவும் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
பெரிய அளவிலான ஐந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள செல்கேர் கிளினிக்குகள் வாயிலாக பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தினசரி நாற்பதாயிரம் தடுப்பூசிகள் வரை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.



