
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் கூட்டத் தொடர், நாளை ஜுலை 26-ஆம் நாள் தொடங்க உள்ள நிலையில், ஒரு கட்டத்தில் எண்பது பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், எந்த எண்பது எம்பி-க்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
222 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும் கோவிட்-19 பாதிப்பிற்கு ஆளான எம்பி-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, உயர்க் கல்வித் துறை துணை அமைச்சர் மன்சோர் ஒத்மான் ஆகியோர் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
நாளைய கூட்டம் குறித்து பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரும் பாடாங் செராய் மக்கள் பிரதிநிதியுமான மு.கருப்பையா கருத்து தெரிவிக்கையில், கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், எண்பது பேர் யார் யார் என்ற விவரம் தெரியவில்லை. நம்பிக்கை கூட்டணியின் கொரடா ஜொஹாரி அப்துல்லா முடிவு செய்வார். அதனால் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற பிறகுதான் உண்மை நிலை தெரியவரும்” என்றார்.
எண்ணற்ற பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வேண்டி இருப்பதால், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் அமைச்சர்களும் அறிவிப்பதைக் கேட்டுக் கொண்டு அப்படியேத் திரும்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொலைக்காட்சி செய்தியைக் கேட்கும் நேயர்கள் அல்லர்.
மக்கள் பிரதிநிதிகள் என்பதை இந்த தேசியக் கூட்டணி அரசு கருத்தில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்று அவர் சாடினார்.
