
பாராங் கத்தி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பினாங்கு இந்து
அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன், தற்போது சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து சற்று மயக்க நிலையில் இருந்த அவர் தற்போது இயல்பு நிலையில் உள்ளார்.
நேற்று அவரை பட்டர்வொர்த் செபராங் ஜெயா மருத்துவமனையில் சென்று கண்ட பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி இதனை தெரிவித்தார்.
விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவேன் என டத்தோ எம்.இராமச்சந்திரன் தம்மிடம் கூறியதாகவும் அவர் சொன்னார்.
துணை முதல்வருடன் பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷெல் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
இதற்கிடையில் டத்தோ இராமச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டுமென பேராசிரியர் பி.இராமசாமி மீண்டும் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.




