
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி அமைதி மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா நேற்று நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்தார் ஆனால், அமைதி மறியலில் பங்கேற்றது தொடர்பில் ஒப்பந்த மருத்துவர்களிடம் போலீசார் விடிய விடிய வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்று இரவு 11.45 மணிக்கு மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நான்கு மணி நேரத்திற்கு பின்னரே முடிவுற்றது என்று மனித உரிமை வழக்கறிஞர் அஸிக் அலி தெரிவித்தார்.
செர்டாங் மேப்ஸ் தனித்திருக்கும் சிகிச்சை மையத்தின் இயக்குனர் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அங்கு பணி புரியும் 12 ஒப்பந்த மருத்துவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.
நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் மருத்துவரிடம் அதுவும் வேலை நேரத்தில் விடிய விடிய விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார். போலீசார் விட்டுக்கொடுக்கும் போக்குடன் நடந்து கொண்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.



