
மலேசிய அரசியலில் தனது ஆட்சி பலத்தை முற்றாக இழந்திருக்கும்
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டுமென பேரா மாநில ஜசெக தலைவர் ங கோர் மிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்துள்ள தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பதை நிருபிக்க அந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு,முடிவு எடுக்கப்பட வேண்டுமென தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
தற்போதைய நாட்டின் அரசியல் நிலவரத்தை மக்கள் தெரிந்துக் கொள்வதற்கும்,அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும்,இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தின் மீது உடனடி கவனம் செலுத்துவது சிறந்தது என்றார்.
இன்று நிலையற்ற அரசியல் சூழ்நிலையால் நாட்டின் பொருளாதாரம்,முதலீட்டு சந்தை,ரிங்கிட்டின் மதிப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு,மக்களும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என ங கோர் மிங் குறிப்பிட்டார்.
