
இக்கட்டான காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை இழந்து,வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய வணிகர்களின் நலனில் அரசாங்கம் கருணைக்
காட்ட வேண்டுமென கெடா பாடாங் செராய் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.கருப்பையா தெரிவித்தார்.
இந்த கோவிட் -19 தொற்றுக் காலத்தில்,மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசாங்கம் அமல்படுத்தியுள்ள
பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய வியாபாரிகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களான
பூக்கடை,முடி திருத்தும் கடை,கார் கழுவும் பட்டறை,உலோக
வியாபாரங்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க
விதிப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வியாபாரிகள்
பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு எந்தவொரு ஆபத்தோ
அல்லது நோய் தொற்றோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இந்த
கடைகளை திறந்து முழுமையாக வியாபாரம் செய்வதற்கு அரசாங்கம்
அனுமதி வழங்க வேண்டுமென அவர் கோரிக்கையை முன்
வைத்தார்.
எந்தவொரு வருமானமுமின்றி எவ்வளவு நாளைக்கு வியாபாரிகள்
அவதிப்படுவார்கள் என அவர் கேள்வியும் எழுப்பினார்.
அதே வேளையில் எவ்வளவு நாளைக்கு அரசாங்கத்திடம் கையேந்தி உதவிகளை கேட்பார்கள் ?
எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு மனிதாபிமான முறையில் அரசாங்கம் வாய்ப்பளித்து உதவிட வேண்டுமென எம்.கருப்பையா
கேட்டுக் கொண்டார்.
