
காராக் இடைநிலைப் பள்ளி , முழு நேர தமிழ் மொழி பாட ஆசிரியர்கள் இல்லை என்ற தகவல் பல பெற்றோர்கள் மூலம் அறிய வந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
மேலும், தெலெமோங் இடைநிலைப் பள்ளி, காராக் செத்தியா இடைநிலைப் பள்ளியிலும் தமிழ் ஆசிரியர்களே இல்லை. ஆரம்பக் கல்வியை தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இடைநிலைப் பள்ளியில் தமிழ் மொழி பாடத்தை ஒரு முக்கியமான பாடமாக எடுத்துப் பயில நினைப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்யவும் பிரச்சனையாக உள்ளதாக பல பெற்றோர்களும் மாணவர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்தநிலை பெந்தோங் வட்டாரத்தில் உள்ள இன்னும் சில பள்ளிகளிலும் நிலவுவதாக தெரிகிறது.
கோவிட் காலகட்டத்தில் இணையம் வழி கல்வி கற்பதால் இதை ஒரு முக்கிய பிரச்சனையாக யாரும் முன்னெடுக்கவில்லை என்று நினைக்கிறேன். பகாங் மாநில கல்வி இலாகாவும் பெந்தோங் வட்டார கல்வி இலாகாவும் இந்த பிரச்சனையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெந்தோங் வட்டாரத்தில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது கல்வி அமைச்சுக்கு தெரியாதா இல்லை தெரிந்தும் தமிழ் மொழி தானே என்ற அலட்சிய போக்கை கடைப்பிடிக்கிறதா? காராக் இடைநிலைப் பள்ளியில் முழு நேர தமிழாசிரியர் ஒருவர் 2019 – ல் பதவி ஒய்வு பெற்றார். மற்றொருவர் 2020 – ல் பதவி ஓய்வு பெற்றார். இந்நாள் வரை இக்காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் இடைநிலைப் பள்ளியில் தொடர்ந்து தமிழ் மொழியை முக்கிய பாடமாக படிக்க வேண்டும். 5 – ஆம் படிவ சோதனையில் தமிழ் மொழி தேர்ச்சி அவர்களுக்கு பெரிதும் உதவும் ஆனால் முழு நேர ஆசிரியர்கள் இல்லாமல் எங்கள் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள் என்று பெற்றோர்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
தமிழ் மொழி பாடத்தில் ஏன் கல்வி இலாகா அலட்சிய போக்கை கடைபிடிக்கின்றனர் என்று சபாய் சட்ட மன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
காராக் இடைநிலைப் பள்ளிக்கும் இதர பெந்தோங் வட்டார பள்ளிகளிலும் உடனே போதிய தமிழ் ஆசிரியர்களை நியமிக்கும்படி காமாட்சி மாநில கல்வி இலகவிற்கும் கல்வி அமைச்சுக்கும் பரிந்துரைத்ததாக அவர் கூறினார்.



