
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் அனைத்துத் தாய்மார்களுக்கும், மகளிருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று மஇகாதேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
தாய்மை என்பது இறைவனின் படைப்பிலேயே மிகச் சிறந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மனித குலத்தில் மட்டுமின்றி விலங்குகளிடத்தில் கூட தாய்மையின் பாசம் நிறைந்து கிடப்பதை நம்மால் காண முடிகிறது.
இந்த மண்ணில் பிறந்ததும் நாம் காணும் முதல் கடவுள் நமது தாயார்தான். அவர்தான் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற பின்னரும் இரவு பகல் பாராமல் கண்விழித்து பாலூட்டி நம்மைப் பாதுகாக்கிறார். வளர்க்கிறார். உணவுகள் அளிக்கிறார். பள்ளிக்கு நாம் செல்வதையும் கல்வி கற்பதையும் உறுதி செய்கிறார். நல்ல பண்புகளை, பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருகிறார்.
இவ்வாறு நமக்கு அன்பும், நல்ல பண்புகளும் சொல்லித் தந்து வளர்க்கும் அன்னையரை அவர்களின் இறுதிக் காலத்தில் கவனிக்காமல் கைவிடும் போக்கு மெல்ல மெல்ல நமது நாட்டிலும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
நமது இந்தியப் பாரம்பரியத்தில் தாய்மைக்கும், தாயாருக்கும் வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும், பெருமைகளும் ஏராளம். பெரும் தலைவர்கள், பிரபலமான மனிதர்கள் பலரும் தங்களின் தாயாரை தெய்வமாகக் கொண்டாடியவர்கள்தான். தாயைப் போற்றியதால்தான், அவரின் ஆசியால்தான் தாங்கள் வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்தோம் என அவர்களே பல தருணங்களில் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.



