
தேசிய முன்னணியில் குறிப்பாக அம்னோவுடன் மஇகாவின் நட்பு 60 ஆண்டுகளுக்கு மேலானது.
அம்னோவின் ஆதரவால் ம இகா பல பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் வெற்றி பெற்று வந்தது இது வரலாற்று உண்மை.
ஆனால் இன்று தேசிய முன்னணியுடன் குறிப்பாக அம்னோவுடன் ஏற்பட்டிருக்கும் மோதல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ம இ கா முன்னாள் தலைமைச் செயலாளரும் இரண்டு முறை மத்திய செயலவைக்கு தேர்வு செய்யப்பட்டவருமான டத்தோ குமார் அம்மன் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனலுடன் கூட்டணி அமைத்து அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட நேர்ந்தால் ம இகாவுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.
கேட்கும் தொகுதிகள் கிடைக்காது மேலும் இந்த கூட்டணியில் பாஸ் கட்சி இடம் பெற்றிருப்பதால் மிகப்பெரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிடலாம் என்று அவர் எச்சரித்தார்.
பாஸ் கட்சி இடப்பட்டிருக்கும் கூட்டணியை இந்தியர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கெடா மாநில பாஸ் அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு உதாரணமாகும்.
அம்னோவுடன் இணைந்து பணியாற்றினால் மட்டுமே ம இகா தனது அந்தஸ்தை தற்காத்துக்கொள்ள முடியும்.
ஒருவேளை அம்னோவை உதறித்தள்ளிவிட்டு பெரிக்கத்தான் நேஷனலுடன் இணைந்து பொதுத் தேர்தலை சந்தித்தால் ம இகா அடையாளம் தெரியாமல் போகும் என்று அவர் எச்சரித்தார்.
நாங்கள் இன்னமும் அம்னோ மற்றும் தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றுவோம். மேலும் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருக்கும் கட்சியில் இணையும் வேளையில் மஇகாவில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.




