
இணையம் வாயிலாக போலி தடுப்பூசி சான்றிதழ் விற்கப்படுவதை சுகாதார அமைச்சு கண்டு பிடித்துள்ளது.
இந்த சான்றிதழ் விற்பனை தொடர்பில் அமைச்சின் பரிசோதனை மற்றும் சட்டப் பிரிவு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.
தாங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று விட்டதாக சிலர் கூறிக் கொள்ளும் சாத்தியம் உள்ளதால் இத்தகைய தடுப்பூசி சான்றிதழ் விற்பனைக்கு அமைச்சு அனுமதியளிக்க வில்லை.
இது போன்ற சான்றிதழ்களைத் தயாரிக்க நாங்கள் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. கடைகளில் அமர்ந்து உணவருந்த அல்லது எல்லைகளைக் கடக்க விரும்புவோர் மைசெஜாத்ரா செயலியில் உள்ள இலக்வியல் தடுப்பூசி சான்றிதழ் அல்லது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தடுப்பூசி அட்டை ஆகியவற்றை மட்டுமே காட்ட வேண்டும் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.



