
இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாடத்தை கட்டாயம் எடுக்க வேண்டும். இது ஒட்டு மொத்தத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்குத் துணை புரிவதோடு இவ்விரு பாடங்களின் சிறப்பு தொடர்ந்து பேணிக் காக்கப்படுவதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் மாணவர்கள் சிறந்து விளங்குவதோடு இவ்விரு பாடங்களின் மேன்மை குறித்து தெளிவாக அறிந்து கொள்வதற்கு எஸ்.பி.எம். தேர்வில் இவற்றை அவசியம் எடுக்க வேண்டும்” என்று மஇகா சிலாங்கூர் மாநில செயலாளர் டாக்டர் வே.செல்வராஜா (செல்வா) தெரிவித்தார்.
நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். காரணம் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் இன்று பல நிபுணத்துவ துறைகளில் பணி புரிவதைக் காணலாம்.இவர்கள் யாவரும் வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைந்திருக்கின்றனர் என்று மஇகா உலு லங்காட் தொகுதி தலைவருமான அவர் கூறினார்.
