
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளுடன் கலந்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியிருக்கிறார்.
ஆனால் இவரின் அறிவிப்பை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் நிராகரித்துள்ளது.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளனர்.
மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து தனது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு அல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி மக்கள் தங்களது வருமானத்தை காப்பாற்றுவதற்கான சிறந்த திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். அகவே, பெரும்பான்மையை இழந்து விட்ட பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒருவர் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பகிரங்கமாக கையூட்டு கொடுப்பதற்கு முன் வந்திருப்பதை நேரடியாக காண முடிவதாக அவர்கள் சுட்டிக்காட்டினார்.
