
திருக்கோயில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பங்கேற்றபோது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோ.செழியன், நந்தக்குமார் ஆகியோர் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். மொட்டைக்கு இனி கட்டணம் இல்லை என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மை என்றால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்துள்ளது. இந்த திட்டத்தைக் கூட சிலர் விமர்சனம் செய்ததை தொலைகாட்சிகளில் பார்க்க முடிந்தது. கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு பக்தர்களிடம் இருந்து 500, 1000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுதாகவும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உயிரையே காணிக்கையாக செலுத்துவது போல தாங்கள் வளர்த்த முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் கூறுகின்றனர். எனவே கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
