
நாட்டில் அமல்படுத்தப் பட்டிருக்கும் மூன்றாவது மக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டு உத்தரவால் டாக்ஸி ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக மலேசியா மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து தெரிவித்தார். ஏற்கெனவே இரண்டு முறை இந்த உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டோம். இப்போது மூன்றாவது முறையாக இந்த உத்தரவு எங்களுக்கு பெரும் இழப்பை தேடித் தரும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே கோலாலம்பூர் ஜுவாரா லீமா டாக்ஸி ஓட்டுனர் சங்க செயலாளர் பிரேம் நசீர் கூறுகையில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு இப்போது மூன்றாவது முறையாக நடமாட்டம் உத்தரவால் மென்மேலும் பாதிக்கப்படுவோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மக்கள் வெளியே வர மாட்டார்கள். இதனால் ஒரு நாளைக்கு பத்து வெள்ளி கூட சம்பாதிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
டாக்ஸி ஓட்டுனர்கள் சூரியமூர்த்தி,ஜீவா, குணசேகரன் ஆகியோர் கூறுகையில் இந்த உத்தரவால் மக்கள் வெளியே வர பயப்படுகிறார்கள். இதனால் டாக்ஸி ஓட்டுனர்கள் எவ்வித வருமானம் இன்றி மீண்டும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.






