
அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுபாட்டு விதிமுறை குழப்பமாக உள்ளது. இதனால் தறைமுக வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிமுறை குழப்பமாக உள்ளதாகத் துறைமுக வியாபாரத் துறையில் ஈடுபட்டு வரும் டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன் ராமசாமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை அரசாங்கத்தின் விதிமுறைகள் குழப்பமாகவும், ஒரு நிலைத்தன்மை இல்லாமலும் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

இதனால் தங்களின் வியாபாரத்தில் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது என்றும், எனவே சுகாதாரத்துறை அமைச்சும், போக்குவரத்து அமைச்சும் ஒரு நிலையான விதிமுறையை தங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன் கேட்டுக்கொண்டார்.
அண்மையில், பாசிர் கூடாங் துறைமுகத்தில் வந்தடைந்த இந்தியக் கப்பலில் நுழைவதற்கு, கார்கோ இன்ஸ்பெக்டர் மற்றும் ஏஜெண்டுகளைச் சுகாதார அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால், மலேசியக் கடல் துறை, அவர்கள் கப்பலில் நுழைவதற்கான எந்த ஒரு அனுமதி தொடர்பான விதிமுறையும் வெளியிடவில்லை.
எனவே, சுகாதார அதிகாரிகள் இந்த விஷயத்தில் முரண்பாடாக இருக்கிறார்கள் என டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன் தெரிவித்தார்.
இந்தியக் கப்பலுக்குத் தடைவிதிப்பது மலேசியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனவும், கடந்த மார்ச் மாதம் வரை இந்தியா, சுமார் 270,195 டன் செம்பனைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜெயந்திரன், அரசாங்கம் இந்த விவகாரத்தைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
