
நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட கெஅடிலான் கட்சியின் முக்கிய தலைவர்கள் பேரா மாநிலத்தில் போட்டியிட்டால் அதனை மனமார வரவேற்பதாக பேரா மாநில அம்னோ தலைவர் டத்தோ ஷாராணி முகமட் கூறினார். எந்த தொகுதியில் எந்த பெரிய புள்ளிகள் போட்டியிட்டாலும் அதனை தடுக்க மாட்டோம். அதில் எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் கிடையாது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரா மாநிலத்திற்கு வருகிறார் என்று முன்கூட்டியே தெரிந்துக் கொண்டால் அம்னோ எச்சரிக்கையாக இருக்கும் என்று அவர் சொன்னார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரா மாநிலத்தில் போட்டியிட வேண்டுமென பேராக் மாநில பிகேஆர் தலைவர் பார்சா வாபா சல்வாடோர் ரிசால் முபாராக் விடுத்திருந்த அழைப்புக் குறித்து டத்தோ ஷாராணி முகமட் இவ்வாறு கருத்துரைத்தார்.



