
பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அகமட் மஸ்லான் இரண்டு குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது அனைத்து மலேசியர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அத்துடன், நீதிமன்ற பரிபாலன முறையில் இரட்டை நிலை கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கேள்வியையும் எழுப்புவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் தெரிவித்தார். நம் நாட்டின் நீதி அமைப்பில் இரட்டை நிலை நடைமுறையில் இருப்பதை இது நிரூபிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அம்னோ பொதுச் செயலருமான அகமட் மஸ்லானுக்கு அபராதத் தொகை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது சட்டத்துறைத் தலைவரின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. அத்துடன் நீதித்துறை மற்றும் அட்டர்னி ஜெனரலின் தோற்றத்தை கடுமையாக சிதைக்கும் அம்சமாகவும் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். அமாட் மஸ்லானுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது ஏற்புடையதல்ல. அவர் நாடாளுமன்ற துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி வகுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற ஐயமும் எழுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.



