
இந்தியர்களின் பொருளாதார-கல்வி- சமுதாய மேம்பாட்டிற்காக அரசாங்கம் வழங்கும் நிதியை பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்ட மித்ரா, ஒரு தனி அறவாரியத்தின்கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். மித்ராவிடம் இருந்து நிதியைப் பெறும் தரப்பினர் மற்றும் அரசுசாரா அமைப்பினர் குறித்து மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எந்தத் தகவலும் சரிவரத் தெரிவதில்லை. அத்துடன் மித்ரா நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையும் இல்லை என்ற குறைகூறல் தொடர்ந்து வெளிப்படுவதால் இதைத் தவிர்ப்பதற்காக ஒரு தனி ‘யாயாசான்’ உருவாக்கப்பட வேண்டும் என்றார் அவர். அவ்வாறு, தனி அறவாரியம் உருவாக்கப்பட்டு, அதன்கீழ் மித்ரா செயல்பட்டால், மித்ரா நிதி அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கப்படுவது போன்ற பிரச்சினையைத் தவிர்க்கலாம். அத்துடன், மித்ரா நடவடிக்கை குறித்து அடிக்கடி அறிக்கை வெளியிட்டு சமுதாயத்திற்குத் தெரிவிக்கும் நடைமுறையும் உருவானால், பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நம்பிக்கை உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.



