
ஜொகூர் ஸ்கூடாய் புக்கிட் கெமிலாங் அஷ்ட சிவ லிங்கேஸ்வரர் கோயிலில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த ஆலயம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாக ஜொகூர் ஜசெக தலைவர்களில் ஒருவரான சந்திரசேகரன் ஆறுமுகம் தெரிவித்தார் . தற்போது பெய்துவரும் அடை மழையால் இந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து உள்ளது. ஆலயத்தை காப்பாற்றும் நடவடிக்கையில இறங்கும் படி மாநில அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் சொன்னார். இருமுறை மண்சரிவின் காரணமாக ஆலயத்தின் ஒரு பகுதி முற்றாக அழிந்து விட்டது. இனி எந்த நேரத்திலும் அந்த ஆலயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

