
டாக்டர் ஜி.குணராஜ், பிகேஆர் தேசிய உதவித் தலைவற் பொறுப்புக்குப் போட்டி இடுகிறார். இதன் தொடர்பில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சிப் பணியையும் சமுதாயப் பணியையும் தேசிய அளவில் முன்னெடுக்க விரும்புவதாகவும் அதன் அடிப்படையில் கட்சியின் தேசியத் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இசைவுடன், பிகேஆர் தேசிய உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டி இடுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதிக் கட்சியில், ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் அனைத்துப் பொறுப்புகளும் தேர்தல் மூலமே உறுதிசெய்யப்படுகின்றன.
கடந்த 2019-இல் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தற்பொழுது 2022-2025 தவணைக்கான தேசியப் பொறுப்பாளர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலைமையில், செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான ஜி.குணராஜ் பிகேஆர் தேசிய உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட இருப்பதாக செய்திருக்கும் அறிவிப்பு, கட்சியில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.
