26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

புத்த துறவிகளின் எதிர்ப்பால் மகிந்த ராஜபக்சே திணறல்

இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து ராஜபக்சே சகோதரர்களை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன. அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதை ஏற்காத மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாக இருக்கும் புத்த மததுறவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இடைக்கால அரசு அமைக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாகவும் கூறி உள்ளனர்.

இது மகிந்த ராஜபக்சேவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பதவியை தக்கவைத்துக் கொள்ள அவர் கடுமையாக திணறி வருகிறார்.

இலங்கையில் எல்லா பொருட்கள் விலையும் உயர்ந்து விட்டதால் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் ஒட்டு மொத்த பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் உணவு பண வீக்கம் 30 சதவீதமாக இருந்தது. தற்போது அது 46.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles