
அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் 15-ஆவது பொதுத் தேர்தல் குறித்து பேசுவதில் இருந்து சற்று ஓய்ந்து காணப்படும் நிலையில், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் அந்த இடத்தை நிரப்புகிறார்.
மலாக்கா, ஜோகூர் மாநிலங்களில் தேசிய முன்னணி அடைந்த அபார வெற்றியினாலும் சரவாக்கில் நம்பிக்கைக் கூட்டணி அடைந்த மோசமான பின்னடைவாலும் இவ்வாண்டு மார்ச்-ஜூன் காலக் கட்டத்திலேயே பொதுத் தேர்தலை நடத்தும்படி துள்ளிக் குதித்த அம்னோ, இப்போதுகூட பொதுத் தேர்தலை நடத்தினாலும் நல்லதுதான் என்கிறது.
ஆனாலும் தாமதம் அடைவதால், வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் 2023 நிதிநிலை அறிக்கைக்குப் பின்பாவது தேர்தலை நடத்தினால், அது அம்னோவிற்கு இன்னும் அணுகூலமாக இருக்கும். அதேவேளை, அது அம்னோவிற்கு சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நெகிரி மாநில ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான முகமட் ஹசான் கூறுகிறார்.
