
மலேசியாவின் நிதி நிலை இன்னும் வலுவுடன் தான் இருக்கிறது. நாட்டின் கடனும் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே நாடு கண்டிப்பாகத் திவால் நிலையை எதிர்நோக்காது என நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சாஃப்ரூல் தெங்கு அப்துல் அஸீஸ் (Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz) திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மலேசியா இதற்கு முன்பு பல்வேறு நிதி நெருக்கடிகள் மற்றும் பொருளியல் தேக்க நிலையை எதிர்நோக்கியிருக்கின்றது. ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வட்டியைச் செலுத்த அது தவறியதில்லை. இவ்விஷயத்தில் மலேசிய அரசாங்கம் எப்போதும் ஒழுங்குடன் நடந்து கொண்டிருக்கிறது. இது கடனையும் வட்டியையும் முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிதி வல்லமை மலேசியாவுக்கு இருப்பதையே காட்டுகிறது. மலேசியாவின் கடன் நிலை, தொடர்ந்து நேர்த்தியாகவும் முறையாகவும் கையாளப்படுவதை அனைத்துலக பண நிதியமும் ஒப்புக் கொண்டுள்ளது என அமைச்சர் சொன்னார்.
மலேசியா கடனில் சிக்கித் தவிப்பதாகவும், அதனால் அது கூடிய சீக்கிரம் திவாலாகி விடும் என்றும், மக்களைக் குழப்பும்படியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருப்பது பற்றி கருத்துரைக்கையில் அமைச்சர் அவ்விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தெற்காசிய நாடொன்று திவாலாகியிருப்பது போல் மலேசியாவும் விரைவில் திவாலாகப் போவதாக வதந்தியைப் பரப்பியவர்கள், பொறுப்பற்றவர்கள் மட்டுமல்லாது தீய நோக்கம் கொண்டவர்கள் என சாடிய தெங்கு சாஃப்ரூல், இதன் தொடர்பில் தகவல்-பல்லூடக ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
