
மூவாரில் மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் மூடா தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ரவுடிக் கும்பல் ஒன்று அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.
அக்கூட்டத்தில் அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெகவின் ஜொகூர் துணைத் தலைவர் லியூ சிங் தோங் ஆகியோர் உரையாற்றிய பின்னர், இறுதியாக சைட் சாடிக் உரையாற்றத் தொடங்கினார். அப்போது ரவுடிக் கும்பல் ஒன்று கூட்டத்திற்கு வெளியே அராஜகம் செய்ததோடு சைட் சாடிக்கை பேச விடாமல் ரகளை செய்தனர்.
சில இளைஞர்கள் கூட்டம் நடந்த கொட்டகைக்கு வெளியே தங்களது மோட்டார் சைக்கிளின் ஒலியை முடுக்கி விட்டு, பேசுவதைத் தடுத்தனர். அங்கிருந்த போலீஸார் அந்த ரவுடிகளை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அது பற்றித் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய சைட் சாடிக், தம்மை எதிர்ப்பவர்கள் நேரடியாக வந்து தம்முடன் விவாதிக்க வேண்டுமென்றும் பேடித் தனமாக கூட்டத்தில் ரகளை செய்யக்கூடாதென்றும் எச்சரித்தார்.
