
🔊To listen to this news in Tamil, Please select the text.
நிபோங் தெபால் இடைநிலைப் பள்ளியில் சில இந்திய மாணவர்கள் வகுப்பறைத் தளவாடங்களை அடித்து, நொறுக்கி சேதம் விளைவித்த வீடியோ பதிவு வைரலாகப் பரவி தலை குனிய வைத்துள்ளது.
பள்ளிச் சீருடை அணியாத மாணவர்கள் நாற்காலிகளைத் தரையில் அடித்து நொறுக்கி, கழிவறைக் கதவுகளைக் காலால் எட்டி உதைத்தும், மின் விசிறியின் பிளேடுகளை மடக்கியும் மற்ற வகுப்பறை உபகரணங்களைச் சேதப்படுத்திய காட்சி அந்த வீடியோ பதிவில் அடங்கியுள்ளன.
கல்வியாண்டின் இறுதி நாளான நேற்று முன்தினம், அதனைக் கொண்டாடும் வகையில் அம்மாதிரியான முகம் சுளிக்க வைக்கும் அட்டகாசத்தை அந்த மாணவர்கள் புரிந்ததாக நம்பப்படுகிறது.
அது பற்றிக் குறிப்பிட்ட கல்வியமைச்சர் Fadlinah Sidek (ஃபட்லினா சீடேக்), சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
வீடியோ பதிவை பொதுமக்கள் பரப்புவதை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். மாணவர்களின் இம்மாதிரியான அடாவடி நடவடிக்கைகளைக் கல்வியமைச்சு பொறுத்துக் கொள்ளாது என்றும் மாவட்ட கல்வி இலாகா தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
