
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதோடு அந்த வாயில்லா ஜீவனை உயிருடன் தீயிட்டு கொளுத்திய ஆடவனைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ஸ்கூடாய், தாமான் இம்பியானில் உள்ள கால்நடை கிளினிக் எதிரே நிகழ்நதுள்ளதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஜோகூர் பாரு மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் பாரிஷ் அமார் அப்துல்லா கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் மாலை 2.59 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார். தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் இச்சம்பவம் தொடர்பான காணொளி குறித்தும் சம்பந்தப்பட்ட நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக பாரிஷ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஜோகூர் மாநில கால்நடை இலாகா 2015ஆம் ஆண்டு பிராணிகள் நலச் சட்டத்தின் 29(1(இ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 25,000 வெள்ளி முதல் 100,000 வெள்ளி வரையிலான அபராதம், மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
ஆடவன் ஒருவன் நாய்க்கு தீயிடும் சம்பவத்தை சித்தரிக்கும் 8 நிமிடம் 54 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



