
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலாக்காவிற்கும் இந்தோனேசியாவில் உள்ள டுமாய்க்கும் இடையே 100 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடல் வழியான பாலத்தை நிர்மாணிக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.
அது சம்பந்தமாகத் தனியார் நிறுவனம் ஒன்று வரைவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருப்பதாக சட்டம், நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் அஸாலினா ஒஸ்மான் தெரிவித்தார்.
அது சம்பந்தமாக ஒப்புதல் தருவதற்கு முன்னர், பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்றும் அதில் நிதி வளம், தொழில் நுட்பத் தேவை, சுற்றுச் சூழல் பாதிப்பு போன்றவை அடங்கும்.
மேலும் அத்திட்டத்திற்கு பெரும் நிதி தேவைப்படும். இரு நாடுகளும் சமமான பொறுப்பு எடுத்துக் கொள்ள சம்மதிக்க வேண்டும். அதற்கு துல்லியமான ஆய்வும் பல அமைச்சுகளின் பங்களிப்பும் தேவைப்படும் என அஸாலினா மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
இந்தப் பாலம் சாத்தியமானால், அது தென் கிழக்காசியாவில் உலகத்தின் மிக நீண்ட பாலமாகக் கருதப்படும்.
டுமாய் மலாக்காவிலிருந்து 110 கிலோ மீட்டர் தூரத்திலும் ரியாவ் வட்டாரத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. தற்போது மலாக்காவிலிருந்து டுமாய்க்கு 2 மணி நேர ஃபெர்ரி சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
